Share via:
மகளிர் உரிமைத் தொகை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்த ஸ்டாலின் இப்போது
விளிம்புநிலையில் இருப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் அள்ளிக்கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று ஸ்டாலின், ‘’கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்
பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை
பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள்
ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன்
அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்!
நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன்
சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத்
திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து
29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு
தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத்
திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான
காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம்
மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச்
சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள்
மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என
8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன்
– தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், தேர்தல் நேரத்தில் மட்டும் வள்ளல் நாடகம் போட்டால் போதுமா..?
இது எல்லாமே ஓட்டுக்காக நடத்தும் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள். நீட் தேர்வை நம்பி
ஏமாந்தது போன்று மீண்டும் ஏமாற மாட்டார்கள் என்று அதிமுக எகிறி அடிக்கிறது.
