Share via:
முந்தைய ஆளுநரும் தமிழக பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளியுமான தமிழிசை
செளந்தர்ராஜனின் தந்தையே இலக்கியச் செல்வர் குமரி அனந்தன். பல்வேறு காரணங்களால் இருவருக்கும்
பேச்சுவார்த்தை கிடையாது. எனவே, தமிழிசையால் புறக்கணிக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு தகைசால்
விருது கொடுத்து கெளரவம் அளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று, சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை
முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும்
மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர்
முனைவர் குமரி அனந்தனுக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த விருதுக்குரிய பத்து லட்சம்
ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
முன்னதாக புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிய
ஸ்டாலின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், ‘’இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில்
தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்வர்கள் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு
வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து
வருகிறது.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும்
தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை
கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை
வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக,
பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக்
கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.
வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ்,
முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச்
செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு
மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து
பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை
உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய
திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க
ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும்
மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும்
மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம்
மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள்
பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து
500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகளை
இந்த அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது.
2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்தார்.