Share via:
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேலநிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் மத்தியில் மகாவிஷ்ணு மூடநம்பிக்கையையும், பிற்போக்குத்தனமான கருத்துகளையும் சொற்பொழிவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சொற்பொழிவை கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்த மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.
அவர் பேசும்போது, மாணவிகள் அழகாக பிறக்காததற்கும், மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கும் முற்பிறவிகளில் அவர்கள் செய்த பாவம்தான் காரணம் என்று பேசினார். மேலும் மறுபிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. அரசு பள்ளிகளில் மூடநம்பிக்கையை பரப்புகிறது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்குழு அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ள நிலையில் காவல்துறையும் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.