Share via:
தமிழ் நாட்டில் பிறக்கவில்லை, தமிழ் மொழியில் பேச முடியவில்லை
என்றெல்லாம் வசனம் பேசும் மோடி, அவற்றை எல்லாம் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்
என்பது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டதில்லை. மீண்டும் தமிழைப் புறக்கணித்து
சமஸ்கிருதத்தைத் தூக்கி தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது மத்திய அரசு.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி;., ‘’சமஸ்கிருதத்துக்கு
2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும்
ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு
மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான
சமஸ்கிருத மேலாதிக்க வெறி…’’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேபோன்று மனிதநேயக் கட்சியின் ஜவாஹருல்லா, தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளை புறக்கணித்து
சமஸ்கிருதத்திற்கு மிதமிஞ்சிய நிதி ஒதுக்கீடு செய்யும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ‘’2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு
சமஸ்கிருத மொழியைப் பரப்ப ₹2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச்
சேர்த்து ஒதுக்கப்பட்ட ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும்
என்று தகவல்
அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ₹230.24
கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி
₹13.41 கோடி
மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்த
பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். 2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம்
பெற்ற தமிழுக்கு, மொத்தம் ₹113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
– இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு. இந்தியாவின் மக்கட்தொகையில்
22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள்.
ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. சமீபத்தில்
மதுரையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ்
என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித்
திட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை
வைத்திருக்கிறார்.