Share via:
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கம்யூனிஸ்ட்சி கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான தகைசால் தமிழரான சங்கரய்யாவுக்கு வயது 102. நூற்றாண்டை கடந்த சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு காரணமாக சங்கரய்யா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் சங்கரய்யாவின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் சங்கரய்யா தனது மாணவ பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும், விவசாய சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து கடந்த 1967, 1977 மற்றும் 1980 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மதுரை சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.