Share via:
ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் நடத்த உள்ளது.
சென்னையில் நாளை (அக்.13) நடைபெற உள்ள இந்த போராட்ட அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘பேச்சுவார்த்தை தொடர்பாக ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களுக்கும் தனித்தனியே தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் காலை 8.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள் என்று தெரிவித்த நிலையில் நான் காலை 8 மணி முதலே என் வீட்டில் காத்திருக்கிறேன். ஆனால் யாரும் வரவில்லை. பரவாயில்லை. அவர்களுக்குள்ளேயே ஒரு சில முரண்பாடுகள் இருக்கும் என்று தெரிகிறது.
எல்லோரும் ஒன்றாக கூடி பேசி ஒரு மித்த கருத்தோடு என்னை வந்து சந்திக்கும் படி நான் அழைப்புவிடுத்துவிட்டு தற்போது காத்திருக்கிறேன். அவர்களுக்காக எனது வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கும். எந்த நேரத்திலும் என்வீட்டிற்கு வந்து ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். எனவே மீண்டும் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன் என்று தெரிவித்தார்.