Share via:
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மற்ற வழக்குகளிலும் விரைவில் விடுதலை
செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் சவுக்கு சங்கர்
வெளியே வரப்போகிறார், முன்பை விட வீரியமாக அவரது தாக்குதல் இருக்கும் என்று ஆதரவாளர்கள்
வரவேற்புக்குத் தயாராகி வருகிறார்.
பெண் போலிசார் குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு
சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக
கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டது. எனவே, அவர் மீது 17 வழக்குகள் உள்ளன. அதோடு குண்டர் தடுப்புக்
காவல் சட்டமும் விழுந்தது.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புக்காவலை ரத்து
செய்யக்கோரி அவரது தாயார் வழக்கு தொடுத்தார். அதோடு, இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக
விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்து செல்வதால், இந்த வழக்குகளுக்கு
தடை விதிக்க வேண்டும் என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
‘சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு
செய்யப்பட்டதா? என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும்’ என கேட்டிருந்தார்.
இதனிடையே சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்
அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆர்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த ஆட்கொணர்வு மீதான மனுவிற்கு
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம், ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் இன்று
தீர்ப்பு வழங்கியது.
சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை
தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைத்ததாக காவல் துறை வாதிடப்பட்டது. அப்போது சவுக்கு
சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பில்
வாதம் வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கர் மீதான குண்டர்
சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால்
சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். எனவே, அனைத்து வழக்குகளிலிருந்தும்
விரைவில் விடுதலை பெற்று வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.
அதோடு தி.மு.க. மீது முன்பைக் காட்டிலும் அதிக அளவுக்கு வீரியமாகப் போராடுவார் என்கிறார்கள்.
அதேநேரம் தி.மு.க.வினரோ, ‘’சங்கர் மீது போடப்பட்டுள்ள 17 வழக்குகளிலும்
ஜாமீன் பெற்று வெளியே வந்தாலும், ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் அலையவே நேரம் சரியாக இருக்கும்.
கை பத்திரமாக இருக்கட்டும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.