Share via:
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் ரூ.2 ஆயிரம் கொடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டத்தில் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. தனது இறுதிகட்ட ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கியது. அது தி.மு.க. ஆட்சியில் தற்போது ரூ.1,000ஆக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற (2024) பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு பதிவாளர்கள் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், மகளிர் உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் காரணமாக வருகிற பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் பெரிய கருப்பனின் இந்த தகவலையடுத்து பொதுமக்கள் மத்தியில் பொங்கல் பரிசு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.