Share via:
மத்தியபிரதேசத்தில் இன்று ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியபிரதேசத்தில் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில் அடர் என்ற தொகுதியில் கிஷுபுராவில் இயங்கிய வாக்குச்சாவடியில் மட்டும் சிலர் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என்பதால் கிஷுபுரா வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாகுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு கிஷுபுரா வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்காளர்களின் நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. தேர்தல் இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வாக்குப்பதிவை யாரும் பதிவு செய்து வீடியோ வெளியிடாத வண்ணம் போலீசார் வாக்குச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.