Share via:
10 ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு 10ரூபாய் நாணயம் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ள போதிலும், மக்கள் சிலர் அவற்றை வாங்க மறுக்கிறார்கள். மேலும் இது போன்ற சம்பவங்கள் பெருமளவில் கிராமப்புறங்களில் நடப்பதாக பொது மக்கள் சிலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. அரசு பேருந்துகளில் கூட ஒரு சில நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனியும் சிறிய கடை, நடைபாதை கடை என அனைத்து கடைகளிலும், தனியார் மற்றும் அரசு பேருந்து நடத்துனர்களும் மக்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்காமல் பெற்றுக் கொள்வது நன்மை பயக்கும்.