Share via:
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கு மருத்துவக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் பொது சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. டெங்கு காய்ச்சல் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருக்கும் பொது மக்கள், நிறுவனங்கள், கடைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் இடங்களும் கொசு உற்பத்தியை தடை செய்வதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மீறுபவர்களுக்கு முதல் முறை நோட்டீஸ் வழங்கப்படும் சரி செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
அபராதம் என்பதையும் தாண்டி பொது மக்கள் பொது நலன் கருதி தங்களை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். ஏனென்றால் நல்ல தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு லட்சக்கணக்கில் தனது இனத்தை பெருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.