Share via:
சென்னையில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் எரிந்து சாம்பலானதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் எரிந்து நாசமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் கேம்ப் நெடுஞ்சாலையில் பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. ஓட்டல் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய சமயத்தில் அன்று அதிகாலை 4.30 மணியளவில் ஓட்டல் அருகே இருந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் தீப்பற்றி எரிந்தது.
அந்த தீ மளமளவென ஓட்டலுக்கும் பரவிய நிலையில் ஓட்டலும் எரிந்தது. இதை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்த உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற மாதவரம் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரம் போராடிய வீரர்கள், ஓட்டலுக்கு தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர். இதில் மொத்தமாக பாதிக்கப்பட்ட ஏ.டி.எம். மைய எந்திரத்தில் பல லட்சம் ரூபாய் தீயில் கருகி நாசமானது. ஏ.டி.எம். மையத்தில் எவ்வளவு பணம் இருப்பில் இருந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகமே ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
