Share via:
தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று
அண்ணாமலை தினமும் கூறிவருகிறார் என்றாலும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
சமீபத்தில் சுதீஷை விமானப் பயணத்தில் அண்ணாமலை சந்தித்துப் பேசியதை அடுத்து, பிரதமர்
பயணத்தின் போது பிரேமலதா மேடை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு டெல்லி கொடுக்கும் கடைசி வாய்ப்பாக பிரதமர் வருகை
இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி 2 நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
செய்கிறார்.
அதன்படி, வரும் 27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரளா மாநிலம்
திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர், மதியம் 2 மணி அளவில்
கோவை சூலூர் வந்தடைகிறார். அங்கிருந்து மதியம் 2.10 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர்
மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். அங்கு மதியம் 2.45 முதல் 3.45 வரை என்
மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு, பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர்
மூலம் மாலை 5 மணி அளவில் மதுரை சென்றடைகிறார். மதுரையில் மாலை 5.15 முதல் 6.15 மணி
வரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இதனையடுத்து
மாலை 6.45 அளவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்லும் பிரதமர், அரசியல்
கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.
மறுநாள் காலை 8.15 மணி அளவில் நட்சத்திர விடுதியில் இருந்து
சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். 8.40 மணிக்கு மதுரையில்
இருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் 9 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி சென்றடைகிறார்.
பின்னர், 9.45 முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில்
பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10
மணிக்கு பிரதமர் மோடி திருநெல்வேலி செல்கிறார்.
அங்கு, மதியம் 12.15 மணி வரை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில்
மோடி கலந்து கொள்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கேரளா செல்கிறார்.
இந்த இரண்டு நாட்களில் பிரேமலதா மேடை ஏறவிட்டாலும் பரவாயில்லை,
மோடியை சந்தித்துப் பேச வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளாராம். பா.ம.க.வினர்
பிடி கொடுக்காத நிலையில், விஜயகாந்த் கட்சியைத்தான் நம்பியிருக்கிறார் அண்ணாமலை.