Share via:
சென்னையில் கல்லூரி மாணவ, மாணவியர்களை குறி வைத்து ஹூக்கா பார் ரகசியமாக இயங்கி வருகின்றன. இந்த தகவல் தெரியவந்ததும், சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கபப்ட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவுக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில், நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சட்ட விரோத செயல்கள் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் உள்ளே புகுந்து சோதனை செய்ததில், அங்கு சட்டவிரோதமாக ஹூக்கா பார் நடத்தப்படுவது தெரியவந்தது. பெரிய இடத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பிரத்யேகமாக ஹூக்கா பார் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து தனியார் விடுதியில் ஹூக்கா பார் நடத்திய ராகுல், முஸ்தக் அகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 ஹூக்கா பைப்புகளும், ஹூக்கா குடுவைகள் மற்றும் ஹூக்கா உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது..