Share via:
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் இருந்து தப்பிக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒதுங்கி நிற்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மழைக்காக சிலர் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்ட போது அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று மேற்கூரையின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த சிலரை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மேற்கூரையின் அடியில் சிக்கியிருந்த சிலரை மீட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 13 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அதில் இருவர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் 56 வயதான கந்தசாமி என்ற பெட்ரோல் பங்க் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார. மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து விபத்து நடந்த சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
