Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகையின் போது பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தீபாவளி தினத்தன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நேற்று (அக்.31) புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். அவர்பேசும்போது பசுமை பட்டாசுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்பதால், மக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பட்டாசுகள் பசுமைப்பட்டாசுகளாக மாற்ற படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.