Share via:
ஒரு காலத்தில் பெரியாருக்கு விழா எடுத்த சீமான் சமீபத்தில் அவர்
மீது கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். அதாவது, “உன் காம இச்சையை தீர்த்துக்கொள்ள
உன் தாயிடமோ, சகோதரியிடமோ உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய ஒருவரை எப்படி என் தலைவனாக
ஏற்றுக்கொள்வது?’’ என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதையடுத்து பெரியார் ஆதரவாளர்கள், ‘’பெரியார் அப்படி எங்கேயும்
கூறவே இல்லை. புராண, இதிகாசங்களில் இப்படியெல்லாம் முறை தவறிய உறவுகள் இருக்கின்றன
என்று சுட்டிக் காட்டியிருந்தார். 1945ம் ஆண்டு குடியரசு கட்டுரையில் மனிதன் எப்படி
உறவினர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு உறவுமுறை என்று தலைப்பிட்டு
பெரியார் விபச்சாரம், ஒழுக்கம் பற்றி கூறுகிறார். கலவி என்று வரும் போது தேசம், மதம்,
சாதி என்று ஒவ்வொரு உறவுமுறையிலும் ஒரு நடைமுறை இருக்கிறது என்பதைத் தான் சுட்டிக்
காட்டுகிறார்.
ஐரோப்பாவில் திருமண முறை எப்படி இருக்கிறது இந்தியாவில் திருமண
முறை எப்படி இருக்கிறது என்று கூறுகிறார்.அது தான் மதங்களில் புராணங்களில் உள்ள விசயத்தைக்
கூட எடுத்துக் கூறுகிறார். இறுதியாக முடிக்கும் போது மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று கூறும் போது பொது அறிவும் ஆராய்ச்சியுமுள்ள மனிதன் சமயோசிதமாக நடக்க வேண்டும்
என்று நல்ல அறிவுரை கூறுகிறார். அதற்காகத் தான் உறவுமுறை விசயம் ஒவ்வொரு நாட்டிலும்,
சாதியிலும், மதத்திலும் எப்படி இருக்கிறது என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினேன் என்று
பெரியார் குறிப்பிடுகிறார்’’ என்று ஆதாரம் தருகிறார்கள்.
இந்த நிலையில் சீமானின் விமர்சனம் குறித்து கடும் கண்டனம் எழுப்பியிருக்கும்
திருமுருகன் காந்தி, ‘’தந்தை பெரியாரை பற்றி மட்டுமல்ல, மேதகு பிரபாகரன், பொட்டம்மான்
உள்ளிட்ட பல தமிழின தலைவர்களை தரக்குறைவாக பேசியவர்தான் சீமான். 2009க்கு முன் திமுகவிடம்
நிதிபெற்றுக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தார். 2009க்கு பின் அதிமுகவிடம் நிதிபெற்றுக்
கொண்டு திமுகவை விமர்சித்தார்.
பாஜகவிடம் நிதிபெற்று பெரியாரை விமர்சித்தார். பின்னர் திமுகவிற்காக
விஜயகாந்தை விமர்சித்தார். பாமகவிற்காக வேல்முருகனை விமர்சித்தார். அதிமுகவிற்காக அய்யா.பழ.நெடுமாறனை
விமர்சித்தார். ஓ.பி.எஸ்சுக்காக சசிகலாவை விமர்சித்தார். பின்னர் சசிகலாவிற்காக எடப்பாடியை
விமர்சித்தார். அதன்பின் எடப்பாடிக்காக ஓ.பி.எஸ்சை விமர்சித்தார். ஸ்டெர்லைட் துப்பாக்கி
சூடு நடத்தியபோது எடப்பாடி ஆட்சி நல்லாட்சி என்றார்.
தன் மீது வழக்கு நெருக்கடி வந்தபோது ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது
என்றார். ஆளுனரை ஆதரிக்க திமுக ஆட்சியை விமர்சித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையை விமர்சித்தார்.
அண்ணாமலையை காப்பாற்ற திமுகவை விமர்சித்தார். மீத்தேன் திட்டத்திற்காக நம்மாழ்வாரை
தெலுங்கர் என்றார். தமிழ்நாடு விடுதலைக்கு படை கட்டிய தோழர் தமிழரசனை தேங்காய் சில்லுக்கு
ஆசைப்பட்டவர் என இழிவு செய்தார். காவிரி டெல்டாவை காக்க ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து
சிறைசென்ற பேரா.ஜெயராமனுக்கு கட்சி மூலமாக கொலைமிரட்டல் விடுத்தார்.
அணு உலையை ஆதரித்த வைகுண்டராஜனுக்காக உதயக்குமாரை விமர்சித்தார்.
2009ல் இலங்கைக்கு ஆயுதம் ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை அடித்துநொறுக்கி சிறைசென்ற கோவை
இராமகிருட்டிணனை தமிழரல்ல என்று இழிவுசெய்தார். ஸ்டெர்லைட்டை ஆதரித்த ரஜனியிடம் நட்பு
பாராட்டினார். ஈழத்தை ஆதரிக்காத கமலஹாசனுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேதகு பிரபாகரனை கொச்சைப்படுத்திய பாரிவேந்தருக்கு பெருந்தமிழர் பட்டம் கொடுத்தார்.
மேதகுபிரபாகரனை தூக்கிலேற்ற வேண்டுமென்ற காளிமுத்துவிற்கு விழா எடுத்தார்.
ஈழப்போராளிகளை கொச்சைப்படுத்தி திரைப்படம் எடுத்த பாலச்சந்தருக்கு
புகழ்வணக்கம் செலுத்தினார். விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்ற ம.பொ.சியை கொண்டாடி
கூட்டம் நடத்தினார். வி.புலிகளை விசாரிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரித்து ஊர்வலம்
நடத்தினார். மதுரை மக்கள் எதிர்த்த பி.ஆர்.பி கிரானைட் முதலாளியை தமிழ் தொழிலதிபர்
என பட்டமளித்து ஆதரித்தார். ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பிய தந்திதொலைக்காட்சியை ஆதரித்தார்.
பாஜகவிற்காக மும்பையில் பிரச்சாரம் செய்தார். மோடி ஆட்சி நல்லாட்சி
என்று தேர்தலில் பேசினார். தமக்கு ஓட்டுபோடாத முஸ்லீம்களை கொச்சைபடுத்தினார். .. இப்படியாக
சீமானின் சாதனை பட்டியல் மிகமிக…நீளமானது. தமிழர் நலனுக்காக உழைத்த பலரை இழிவு செய்த
சீமான், தமிழின விரோதிகளான சாவர்க்கர், ஹெட்கேவர், ராமகோபாலன், சோ ராமசாமி முதல் இன்றய
மோகன்பகவத், சங்கராச்சாரி, சுப்ரமணியசாமி, குருமூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்களை
சிறிதும் விமர்சனம் செய்யாததில்லை என்பது சீமானின் தனிச்சிறப்பு.
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவு செய்த, ஆளுனருக்கு ஆதரவாக தோள்களை
உயர்த்தும் மாவீரன் சீமான். எத்தனைபேர் செத்தாலும் நீட் தேர்வுண்டு எனும் அண்ணாமலையை
நெஞ்சார தழுவும் இந்துத்துவ போர்படை தளபதி சீமான். இப்படி பலமுகங்கள் அவருக்குண்டு.
இவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றம் என்ன? என்பதைவிட, தமிழர்களால் இவருக்கு கிடைத்த
முன்னேற்றம் என்ன? என நீங்கள் சிந்தித்தால் சீமானின் உண்மை முகத்தை உணர வாய்ப்புண்டு.
முட்டாளாய் இருப்பதுவும், சீமானின் ரசிகனாய் இருப்பதுவும் ஒன்றுதான். இருவரையும் யாராலும்
காப்பாற்ற முடியாது..’’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
சீமானுக்கு கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கும் நிலையில் அவரது
வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.