Share via:
ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி போலீஸ் எஸ்.பி.யிடம் தொழில் அதிபர் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஆவின் சங்கத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் ஒரு சில நாட்களில் மீண்டும் கட்சியில் இணைந்தார். அவர் மீது தற்போது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளது.
தற்போது ஓ.ராஜா மீது தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்த நாகராஜன் என்ற தொழில் அதிபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மகன் தொழில் செய்வதற்காக முன்னாள் பெரியகுளம் நகர்மன்றத் தலைவரும் தற்போதைய தேனி மாவட்ட ஆவன்பால் தலைவருமான ஓ.ராஜாவிடம் 4 கோடிர பாய் பணம் கடனாக வாங்கினேன். அதற்கு ஈடாக என் பெயரிலும், என் மனைவி பெயரில் உள்ள தென்னந்தோப்பின் அசல் பத்திரங்களையும் ஓ.ராஜா வாங்கிக் கொண்டார்.
முதல்கட்டமாக அவரிடம் கடந்த 2021ம் ஆண்டு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்தேன். அதற்கு பின்னர் கொரோனா தொற்று காலத்தில் என்னால் மீதி பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனது. இதனால் என்னிடம் இருந்து 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டார். அதைத்தொடர்ந்து பலமுறை தவணைகளாக இதுவரை நான் ரூ.3 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளேன். நான் அவரிடம் இருந்து வாங்கியது 4 கோடி ரூபாய் மட்டுமே. இதுவரை 3 கோடி ரூபாய் கொடுத்துவிட்டேன்.
இந்நிலையில் என்னுடைய வீட்டிற்கு வந்த அடியாட்கள் சிலர், மேலும் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர். தர மறத்தால் என்னையும், என் மனைவியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனவே ஓ.ராஜாவால் எனது மற்றும் என்னுடைய குடும்பத்தாரின் உயிருக்கு எந்நேரத்திலும் ஆபத்து நேரலாம் என்ற அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் எங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு ஓ.ராஜாதான் காரணம் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இப்புகார் மனுவைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தரப்பையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.