Share via:
எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி
தொடங்கி அத்தனை தலைவர்களும் இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து
வருகிறார்கள். தி.மு.க. சார்பில் சேகர் பாபுவும் இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை சிறப்பாக
கொண்டாடியுள்ளார். அடுத்தது எம்.ஜி.ஆர். ஆட்சிதான் என்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்குக்
கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு வரும் 25ம் தேதி மாணவர் அணியின் சார்பில் வீரவணக்க
நாள் கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், “உலகெங்கும் வாழும்
தமிழர்கள் அனைவருக்கும், நம்முடைய அன்புத் தலைவர், இதய தெய்வம், மக்கள் திலகம் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் என்பது, ஒரு மகிழ்ச்சியையும், உணர்வுப்பூர்வமான
அனுபவங்களையும், தாய்மைப் பாசத்தையும், கருணையையும், மனித நேயத்தையும், மானுடப் பற்றையும்
மலரச் செய்யும் பொன்னாள் தான் இந்நாள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக்குப் பின்னர்
தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன.
அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்
அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப்
பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும்
அமைந்தன.
புரட்சித் தலைவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி
சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான் இன்றளவும்
வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத்
தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்; இதுபோன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம்
செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே ‘எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப்
பின்’ என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர் நம் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய
அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. புரட்சித்
தலைவரைத் தொடர்ந்து, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலும்;
அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன்
சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எராளம், ஏராளம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால்,
தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான்,
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பிறகு, நம் இருபெரும் தலைவர்களின்
நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை
தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை
விரட்டவும், புரட்சித் தலைவரின்; புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில்
மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
புரட்சித் தலைவர்; புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ்
நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு
ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள்
எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு
நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும்,
ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும்
நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். ஆர்வத்தோடு
தொண்டாற்றுவோம்! புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் நல்லாட்சியை மலரச் செய்வது,
நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
அதோடு மொழிப்போய் தியாகிகளுக்கு இதுவரை அ.தி.மு.க. விழா எடுத்ததில்லை
என்பதை உடைக்கும் வகையில் 25ம் தேதி பிரமாண்டமாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க
நாள் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

