Share via:
பழனி முருகன் கோவிலுக்கு நாளை முதல் செல்போன் மற்றும் வீடியோ கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நாளை அமலுக்கு வர உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உலகப்பிரசித்தி வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களில் சிலர் ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். இது குறித்து எழுந்த சர்ச்சையின் காரணமாக புதிய தடை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்வது தொடர்பாக மதுரை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து நடவடிக்கை எடுப்பாக கோவில் சார்பில் மதுரை நீதிமன்ற கிளையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் படி வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பழனி கோவிலுக்கு பக்தர்கள் செல்போன் மற்றும் கேமராக்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தப்படும் எந்த சாதனங்களையும் எடுத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையை ஒரு பெண் தன்னுயை செல்போனில்படம் பிடிக்க முயன்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பாதுகாப்பு ஊழியர் மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

