Share via:
தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அண்ணாமலைக்கு
எதிராக தில்லு ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இதன் பிறகும் அண்ணாமலை
வார் ரூம் செயல்பாடுகள் குறையவில்லை என்றாலும் அண்ணாமலை மட்டும் கப்சிப் என அமைதியாக
இருக்கிறார். இதையடுத்து மீண்டும் உருவாகிறது சர்ச்சை புயல்.
முன்னதாக தமிழிசை செளந்தரராஜன் பொதுவெளியில் அண்ணாமலையின் வார்
ரூம் செயல்பாடுகளைக் கண்டித்தார். அதற்கு அமித்ஷாவிடம் இருந்து எதிர்வினை வந்தது. ஆனால்,
இப்போது காலம் மாறிவிட்டது. பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’பாஜகவில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சனம்
செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். .தமிழக பாஜகவில் இனிமேல் வார் ரூம் அரசியல்
இருக்க கூடாது. பா.ஜ.க.வினர் வார் ரூம் செயல்பாடுகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க
வேண்டும். இது கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும்’’ என்று கண்டிப்பு காட்டினார்.
இதற்கு நயினாருக்கு பா.ஜ.க.வின் மற்ற தலைவர்களிடமிருந்து பெருத்த
வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேநேரம் வார் ரூம் ஆட்கள் சிலர், ‘’இனியும் திமுகவுக்கு
இணையாக அதிமுகவை விமர்சனம் செய்யத்தான் போகிறோம். அண்ணாமலை என்ற ஒற்றை மனிதருக்காகவே
பா.ஜ.வில் இருக்கிறோம்’’ என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம், அண்ணாமலை இதற்கு
எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் ஒரு பெரிய மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
உட்கட்சி மோதல் பெரிதாகும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். நயினார் நாகேந்திரன்
தொடர்பான வீடியோ அண்ணாமலையிடம் இருக்கிறது. ஆகவே, நயினார் பேச்சைக் குறைக்கவில்லை என்றால்
அந்த அணுகுண்டு வெடிக்கும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நயினார்
நாகேந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “மாநில வருமான வரி துறை விசாரணை
நடத்திய பின்பு தான் அமலாக்கத்துறை டாஸ்மாக் விவகாரத்தில் விசாரணை நடத்தினர்.
எனவே நீதிமன்ற தீர்ப்பு, இடைக்கால தடைக்கு விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஏற்கனவே
உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என கேட்டு வந்தார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அதைப்பற்றி பேசலாம்.’’ என்றவர் அ.தி.மு.க.வுடன் கட்டாயக்
கூட்டணி குறித்து பேசியவர், ‘’எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் தான் அதிமுக பாரதிய
ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது’’ என்று கூறினார்.
என்னமோ நடக்கப்போகுது.