Share via:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமாவளவன்
இப்போது தமிழக அரசியலுக்குத் திரும்புவதற்கு எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்பதும், அவரது
அக்கா மகளுக்கு சீட் கொடுத்திருப்பதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்
பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி காட்டுமன்னார்கோயில் – தொல்காப்பியன் திருமாவளவன்,
செய்யூர் – சிந்தனை செல்வன், பெரியகுளம் – ஆற்றலரசு, திண்டிவனம் – வன்னியரசு, அரக்கோணம்
– எழில் கரோலின், திருப்போரூர் – பன்னீர்தாஸ், பண்ருட்டி – அப்துல் ரஹ்மான், கள்ளகுறிச்சி
– முனைவர் வழ. மாலதி ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.
திருமாவளவன் மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதால்
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் இதுவரை
எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் அதாவது ஆளூர் ஷா நவாஸ், SS பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர்
ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறாரா… அதனால்தான் அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லையா
என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்பி பதவிக்காலத்தை முடிக்காமல் எம்எல்ஏ தேர்தலில் நிற்பது அரசியல்
அறமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் 2024ம் ஆண்டு எம்பி ஆனவர். இரண்டு ஆண்டுகளுக்குள்
அதை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ தேர்தலில் நிற்கிறார் என்றால், முந்தைய தேர்தலில்
வாக்களித்து வெற்றிபெற செய்த மக்களின் நம்பிக்கையை உடைக்கிறார் என்பதே அர்த்தம்.
ராஜினாமா செய்யும் தொகுதியில் நடக்கும் தேர்தல் செலவை அந்த முன்னாள்
வெற்றி வேட்பாளர்தான் ஏற்க வேண்டுமென நிபந்தனை விதித்தால் மட்டுமே இதுபோன்ற முட்டாள்தனமான
வேலையை யாரும் செய்ய மாட்டார்கள்.
அதேபோல் திருமாவளவனின் அக்கா மகள் மாலதிக்கு கள்ளக்குறிச்சியில்
சீட் கொடுத்திருப்பதும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. வித்தியாசமான அரசியல்வாதியாக
இருப்பார் என்று திருமாவளவன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் தலையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார்.
