Share via:
பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று தன்னுடைய காலை உணவுத் திட்டம் அமைய வேண்டும்
என்ற எண்ணத்தில் கடந்த 2022ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளிகளில் மட்டும் காலை உணவுத் திட்டம்
தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து பெருந்தலைவர்
காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம்
முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத்
திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள
3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள்
பயனடைவார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில்
உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத் திட்டத்தை தமிழ்நாடு அரசின்
சார்பில் முதல்வர் தொடங்கிவைத்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது,
அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு கலகலப்பு உண்டாக்கினார்.
முதல்வர் ஸ்டாலின் அடுத்து பேசுகையில், ‘’தமிழ்நாட்டு மாணவர்கள்
கல்வியை உறுதி செய்ய பெற்றோரின் பாசத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த காலை உணவுத்
திட்டம். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது.
அது பசியாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி. அந்தத் தடைகளை நாங்கள் உடைக்கிறோம்.
முன்பு நாம் நீட் தேர்வை எதிர்த்தபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நம்மை கேள்வி கேட்டனர்.
இன்று ஒட்டுமொத்த நாடும் நீட் தேர்வை தமிழகத்தின் வழியில் எதிர்க்கிறது. பல தலைவர்கள்,
மாணவர்கள் அமைப்பினர் தற்போது நீட் தேர்வை எதிர்க்கின்றனர். ஏன், உச்ச நீதிமன்றமே நீட்
தேர்வைப் பற்றி கேள்வி கேட்கிறது.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற
ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? அத்தகைய ஆக்கபூர்வமான செயலை ஒன்றிய அரசு செய்யுமா?.
மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட்
தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ!. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும்,
அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறுதுணையாக இருப்போம்.
மாணவர்களே, நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதுமட்டும்தான்
யாரும் திருட முடியாத சொத்து. நீங்கள் உயர உங்கள் வீடு உயரும் தொடர்ந்து நாடும் உயரும்’’
என்று பேசினார்.
நீட் தேர்வு விலக்குக்கு போராடிவரும் தி.மு.க. இனி கல்வியை மாநிலப்
பட்டியலுக்கு மாற்றுவதற்கும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறதாம். எமர்ஜென்சியை எதிர்க்கும்
பா.ஜ.க. அந்த காலகட்டத்தில் நடந்த இந்த மாற்றத்தை உடனடியாக மாற்ற வேண்டுட்ம் என்று
கோரிக்கை வைத்திருக்கிறார். மாற்றம் நடக்குமா என்று பார்க்கலாம்.