Share via:

சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை
தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால்
வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து, தமிழர்களிடமும் மன்னிப்பு
கேட்க வேண்டுட்ம் என்று ஆவேசக் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்
தலைவர் வேல்முருகன்.
இது குறித்து வேல்முருகன், ‘’மலையாள இயக்குனர்கள், நடிகர்கள்,
துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும், சென்னையில் திரைப்பட தொழிலை கற்றுக்
கொண்டு, அவர்களின் சொந்த மாநிலத்திற்கு வண்டி ஏறும் போது, கூடவே தமிழின வெறுப்பையும்
சுமந்துக் கொண்டே செல்கின்றனர். இதன் காரணமாகவே, அவர்கள் பணியாற்றக்கூடிய மலையாள திரைப்படங்களில்
தமிழின வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
மலையாள இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கிய “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”
காதல் திரைப்படத்தில், இலங்கை அமைதிப்படையை ஆதரித்தும், ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும்
காட்சி சம்மந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருந்தது. தென் தமிழக விவசாயிகளின் சோற்றில்
மண்ணை போடும் விதமாக “முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும்” என்கிற பிரச்சாரத்தை
வலியுறுத்தி சோஹன் ராய் என்ற மலையாளி ‘டேம் 999’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தமிழர்களை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கிய ’இனம்’,
ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்பை நியாயப்படுத்திய ‘மெட்ராஸ் கபே’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள்
சான்றாக இருக்கிறது.
இத்திரைப்படங்களின் வரிசையில், கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால்
நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து
அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும்
தொடர்பே இல்லாமல், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பது வன்மையாக
கண்டிக்கதக்கது.
குறிப்பாக, நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு, பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக
எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டானாம். மன்னராட்சியும்
போய் விட்டதாம். ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்பதாக நடிகை மஞ்சு
வாரியர் பேசும் வசனம் தமிழின காழ்ப்புணர்ச்சியின் உச்சம். மேலும், இரண்டு ஷட்டரை திறந்தாலே,
மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால்,
கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால்
பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.
தமிழின வெறுப்பை உமிழும் இதுபோன்ற திரைப்படங்கள், தமிழ்நாடு, கேரள
மாநில மக்களிடையே நீடித்து வரும் நல்லுறவை சீர்குழைத்து, இருமாநில உறவை கெடுக்கும்.
எனவே, எம்புரான் திரைப்படத்தில், முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும்
வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை
கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே 17 இடங்களில் கட் செய்வதற்குத் தயாராக இருப்பதாக சொல்லப்படும்
நிலையில், மேலும் சில இடங்களில் கட் செய்வது தவறு இல்லையே. இந்த படத்தை தமிழ்நாட்டில்
தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் இப்போது கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன.