Share via:
தீபாவளி பண்டிகையுடன் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளைக் கொண்டாடிய
பிரதமர் மோடி விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரப்போகிறது என்று அறிவித்திருப்பது
எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு உண்டாக்கியிருக்கிறது. மாநிலக் கட்சிகளை முடக்கும்
முயற்சியாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின
கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான
அனைத்து முயற்சிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அரசு தனது கொள்கைகள் மற்றும் முடிவுகளில்
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஆதார் மூலம் ஒரே நாடு, ஒரே அடையாளம், ஜிஎஸ்டி மற்றும்
தேசிய குடும்ப அட்டை போன்ற ஒரே தேசம் மாதிரிகளை நிறுவுவதற்கான முயற்சிகள் அனைத்து மாநிலங்களையும்
ஒரே கட்டமைப்பின் கீழ் இணைக்கும் ஒருங்கிணைந்த நடைமுறையை உருவாக்குகிறது. இந்த ஒற்றுமைக்கான
எங்களது முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேசம், ஒரே சிவில்
சட்டம், அதாவது மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை உருவாக்க நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம்’’
என்று பேசியிருக்கிறார்.
இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே,
‘’மோடி எப்போதும் செய்வதை சொல்ல மாட்டார் சொல்வதை செய்ய மாட்டார் எனவே மக்கள் பிரதிநிதிகள்
அனைவரையும் அரவணைத்து எதிர்ப்பின்றி ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியாவில் கொண்டுவர அவரால்
ஒரு போதும் முடியாது அது சாத்தியமும் இல்லை’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆனால் அரசியல் பார்வையாளர்கள், ‘’இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால்
மட்டுமே அடுத்த தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். தற்போது மாநிலக்கட்சிகள்
பலம் பெற்று வருவதை பா.ஜ.க. விரும்பவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறும் நிலையில்
மாநிலக் கட்சிகளுக்கு உள்ள பலம் உடைக்கப்பட்டுவிடும். அமெரிக்கா பாணியில் இரண்டு கட்சிகள்
மட்டுமே நாடு முழுக்க இருக்கும் சூழல் உருவாகும். மாநிலக் கட்சிகள் எல்லாமே வேறு வழியின்றி
ஏதேனும் ஒரு கட்சிக்கு அடிமையாகும் சூழல் உருவாகும். தனித்தன்மையுடன் எந்த மாநிலக்
கட்சியும் இயங்க முடியாது’’ என்று தெரிவிக்கிறார்கள்.
மோடி சொன்னதை செய்வாரா என்று பார்க்கலாம்.