Share via:
கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வெங்கடேசனின் காலில் திடீரென்று விழுந்து கதறிய கிராமத்து பெண் ஒருவர், மதுபானக் கடையை மூடிவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு (அக்.2) தமிழகம் முழுவதும் நேற்று கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராமசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூடியது. இதில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை வகித்து பேசினார்.
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து, தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் தன் காலில் விழுந்த பெண்ணிடம், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் பலரும் இதே கோரிக்கையை முன்வைத்ததால், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. அனைவரிடமும் தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவத்தால் கிராம சபைக்கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
