Share via:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வுப்பணி மேற்கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் மாதவன் நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, பெருமழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சரி செய்யும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தலைமை பொறியார்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.