Share via:
நாங்குநேரியில் தாக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமியை அவர்களது குடும்பத்தாரையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதி பாகுபாட்டால் சிறுவன் மற்றும் அவனது தங்கை வீடு புகுந்து சக மாணவர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிர்வலைகள் ஏற்பட்டன. தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறுவன் மற்றும் சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி சிறுவன் மற்றும் சிறுமியை நேரில் சந்தித்ததுடன் நெல்லை பள்ளியில் மாற்றுவதற்கான மாற்றுச் சான்றிதழ்களை வழங்கினார். அதோடு அவர்களின் தாய்க்கு நெல்லையில் உள்ள சத்துணவு மையத்தில் பணிபுரிவதற்கான பணி மாறுதல் ஆணையையும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, மருத்துவக்குழுவனர் உடன் இருந்தனர்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தாக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமியின் குடும்பத்தாருக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு வழங்குவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கியுள்ளோம். மேலும் நெல்லையில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான மாறுதல் ஆணையையும், அவர்களின் தாயாருக்கு நெல்லையில் உள்ள சத்துணவு மையத்தில் பணிபுரிவதற்கான பணி மாறுதல் ஆணையையும் வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.