Share via:
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டோம் என்றும் பிளஸ்2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கை¬யில் உறுதியுடன் தெரிவித்து அது குறித்த நடவடிக்கைகளையும், தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 20ம் தேதி நடத்தப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியை மக்கள் பங்கெடுப்புடன் நடத்திடும் வகையில், இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி, மாவட்ட& மாநகர அமைப்பாளர்களுடனான இணைய வழி கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி பதிவின் அடிப்படையில் இன்று (அக்.18) மாலை நடைபெற உள்ள கையெழுத்து இயக்கத்திற்கு அணிகளின் தலைவர்கள், இணை துணை செயலாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களும், மாணவ, மாணவிகளும் கையெழுத்து இயக்கத்தை வெற்றியடைய செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.