Share via:
அமைச்சர் செந்தில்பாலாஜி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்குமாறு மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். மேலும் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் அவரின் உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் மனுக்கள் பல முறை தாக்கல் செய்யப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டு அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
நேற்று (அக்.9) புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது செந்தில்பாலாஜி வீல் சேரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இன்று (அக்.10) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வாதத்தை முன்வைத்தார். அப்போது நாளை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்டவல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.