Share via:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் இருந்து ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து ரூ.1.25 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.ரமேஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
மேலும் புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிவா, கென்னடி, செந்தில், சம்பத், நாகராஜன், நாஜிம் மற்றும் கழக நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அதோடு கழக நிர்வாகிகள் கோபால், கார்த்திகேயன், ஏ.கே.குமார், சக்திவேல், சன்குமார், முகிலன் உள்ளிட்டோர் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.11 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.12) முகாம் அலுவலகத்தில் சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.
***********