Share via:
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே போராட்டம் மூலம் மக்களுக்கு அறிமுகம்
ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால். நியாயம், நேர்மையான அரசியல்வாதியாக இருப்பார் என்று மக்கள்
நம்பி ஆட்சியை ஒப்படைத்தார்கள். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து ஜெயிலுக்குப்
போய்வந்தார். இதை பா.ஜ.க.வின் மோசடி என்றே மக்கள் நம்பினார்கள். இந்த நிலையில், அவர்
எத்தனை ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தியிருக்கிறார் என்ற தகவல் வெளிவர, மக்கள் அதிர்ந்து
நிற்கிரார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வரானதும் டெல்லியின் சிவில்லைன்ஸ் பகுதி பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள அரசு இல்லத்தில்
அவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இது 21,000 சதுர அடி கொண்ட வீடு ஆகும். அவர்
பல கோடி ரூபாய் செலவில் வீட்டை அலங்கரித்ததாக கடந்த ஆண்டு மே மாதம் சமூக வலைதளங்களில்
தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் டெல்லி பொதுப்பணித் துறை டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ
இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள், அதற்கான செலவுகள் குறித்த பட்டியலை
வெளியிட்டு உள்ளது. இதன்படி டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவி வகித்தபோது, முதல்வரின்
இல்லம் ரூ.100 கோடி செலவில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக டெல்லி முதல்வரின்
இல்லத்துக்காக ரூ.5.6 கோடி செலவில் 80 ஜன்னல் திரைகள் வாங்கப்பட்டு உள்ளன. சமையல் அறை,
குளியல் அறை, கழிவறைக்காக ரூ.15 கோடிமதிப்பில் சானிட்டரி பிட்டிங்ஸ் வாங்கி பொருத்தப்பட்டு
உள்ளன. தானாக மூடி திறக்கும் மேற்கத்திய கழிவறை சாதனம் மட்டும் ரூ.12 லட்சம் மதிப்பில்
வாங்கப்பட்டு உள்ளது.
முதல்வரின் இல்லத்தில் 4 அதிநவீன ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள்
பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.64 லட்சமாகும். தொலைக்காட்சி பெட்டிகளுக்கான
ஒலிபெருக்கிகள் ரூ.4.5லட்சத்துக்கு வாங்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் பிரிட்ஜ் ரூ.9 லட்சத்துக்கும்
மைக்ரோவேவ் ஓவன் ரூ.6 லட்சத்துக்கும் வாங்கப்பட்டு உள்ளன. வீட்டுக்கு தேவையான ஷோபாக்கள்
ரூ.10 லட்சத்துக்கும் காபி தயாரிக்கும் இயந்திரம் ரூ.2.5லட்சத்துக்கு வாங்கப்பட்டு
உள்ளன.
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
டெல்லியில் பெரும்பாலான மக்கள் குடிசையில் தங்கியிருக்கும் நேரத்தில் ஒரு மஹாராஜா போல்
வாழ்ந்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அதிர்ந்து நிற்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தை
இப்படித்தான் செலவழிப்பாரா..?