Share via:
கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தரிகியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் சொந்த பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் இறந்துவிட்ட நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு போலீசார் கைகளில் இருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. ஏ.டிஎஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்ட நிலையில், 49 பேர் அடங்கிய குழு கொடநாடு கொலை, கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதே மாதம் 18ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் செல்போன் இருப்பிடம், அவர் எந்தெந்த எண்களுக்கு பேசியிருந்தார் உள்ளிட்ட தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். அதற்கு நீதிபதி, அந்த எண்கள் யாருடையது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இது குறித்த ஆய்வுகள் குஜராத்தில் நடத்தப்பட்டு வருவதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கோரிக்கை வைத்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்த நிலையில் நேற்று (நவ.24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குஜராத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட செல்போன் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய சி.பி.சி.ஐ.டி. தரப்பு வழக்கறிஞர், இதுவரை 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார். குஜராத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் விசாரணையில் பெரியளவு முன்னேற்றம் இருக்கும் என்றும் நீதிபதியிடம் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனான சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். கனகராஜ் விபத்தில் சிக்கியபோது, ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனான சிவக்குமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார் என்ற அடிப்படையில் இநுத சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (29ம்தேதி) சிவக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.