Share via:
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது புத்தகம் ஒன்றை சோனியா காந்தியின் கைகளில் கொடுத்த முதலமைச்சர் சிறந்த வரவேற்பை அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் பிரமுகர்களை கனிமொழி எம்.பி. அழைத்திருந்தார்.
அதன்படி சென்னை வந்து சேர்ந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் இன்றைய சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறாது என்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பின் போது திட்டவட்டமாக தெரிவித்தார்.