News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us


விஜய் கட்சியில் சங்கமிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட காளியம்மாள் இன்னமும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். விஜய் கட்சியில் அவர் கேட்ட தொகை கொடுக்கப்படாததால் அங்கு சேர்வது தள்ளிப் போகிறதா என்பது குறித்து நாளிதழின் கேள்விக்குப் பதில் கூறியிருக்கும் காளியம்மாள் சீமான் குறித்தும் விஜயலட்சுமி குறித்தும் விலாவாரியாகப் பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில் காளியம்மாள், ‘’இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பற்றி தவறான தகவல்கள் தலைமைக்கு தெரிவிக்கப்படுவதாக தெரிய வந்தது. அப்போது அண்ணன் சீமானை சந்தித்து, “என்னைப் பற்றி தவறான தகவல்கள் உங்களுக்கு வருவதாக நான் கேள்விப்பட்டேன்” என்று சொன்னேன். அதற்கு, “நான் உன்னை ஏதாவது கேட்டேனா… கட்சியில் ஒருவர் வளர்ந்து வந்தால் ஒரு சிலருக்கு அது முரணாகத்தான் இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்… நீ என்னை நம்பலாம்” என்று நம்பிக்கையோடு பேசி அனுப்பி வைத்தார்.

அனால், அந்த ஆடியோ வெளியானபோது நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அது எனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியது, நாம் என்ன செய்தோம் என வருந்தினேன். அந்த ஆடியோவை அண்ணனுக்கு நான் தான் அனுப்பி வைத்தேன். பிறகு, அண்ணனுடன் இருக்கும் மாநில பொறுப்பாளர் ஒருவர் என்னிடம் பேசினார். “அண்ணன் ஒரு போதும் உன்னை தவறாகப் பேசமாட்டார்” என சமாதானம் சொன்னார். அதன்பின், திருவாரூர் நிகழ்ச்சிக்கு வந்த அண்ணன் சீமான், “மனதில் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். உன்னை நான் என்றுமே அப்படி நினைக்க மாட்டேன்” என்று சொன்னார். அதன் பிறகு நிறைய கூட்டங்களில் பங்கேற்றேன். நான் நாதக-வில் இருந்து வெளியேற காரணமான சம்பவங்களை சொல்ல விரும்பவில்லை.

எனக்குள் எழுந்த கேள்வி என்னவென்றால், ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தனது தளபதியிடம் ரகசியமாக பேசுவது எப்படி பதிவு செய்யப்பட்டது, அது எப்படி வெளியானது, அவர்களை கண்டறிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, அத்தோடு தொடர்ந்து ஆடியோக்கள் வெளியாவது குறித்து ஏன் முழுமையான விசாரணை இல்லை என்பதுதான்.

அந்த சூழலில் நான் அண்ணனிடம், “ஏன் அண்ணா இப்படி பேசினீர்கள்? பணம் அல்லது பரிசுப் பொருள் கொடுத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் எனக்கு எதற்கு ஏற்படுகிறது? நான் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்பதை என் வீட்டுக்கு வந்து பாருங்கள். சுனாமி குடியிருப்பில் குடியிருக்கும் நான் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியுமா?” என்று கேட்டேன்.

அதற்கு, “நீ ஆங்காங்கே கூட்டம் போடுவதாக சிலர் என்னிடம் சொன்னார்கள்” என்றார். “அதை என்னிடம் கேட்டிருக்கலாமே?” என்றேன். “ஆமாம் நானும் உன்னை கேட்டிருக்க வேண்டும். அதற்கான சூழல் அமையவில்லை. சரி அதனை விடு, நமக்கான அடுத்த களம் தயாராகி விட்டது, நீ வேலையில் கவனம் செலுத்து” என்றார். ஆனால், நாம் தமிழரில் இருந்து வெளியேறுபவர்களை களைகள் என்று சொல்லிவிட்டார்.

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள் என்று அண்ணன் பகுப்பாய்வு செய்ய வேண்டும். களையை பிடுங்குவதாக கூறி விளைந்த பயிரை பிடுங்கிப் போட்டு விடக்கூடாது இல்லையா. பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதக-வில் யாரும் சேரவில்லை. ஆழமான தமிழ்த்தேசிய உணர்வோடு இந்தக் கட்சியில் செயல்பட்டவர்களுக்கு இந்தக் கருத்து வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணத்துக்காக நம்மை விட்டு பிரிகிறார்கள் என்று அண்ணன் யோசிக்க வேண்டும். மற்ற கட்சிகள் அதிகாரத் தன்மையுடன் முடிவெடுப்பதை விமர்சனம் செய்யும்போது, நாதக-வில் ஜனநாயகம் இருக்க வேண்டும் அல்லவா. முடிவு எடுப்பவர் தலைவராக இருந்தாலும், அதை ஜனநாயகபூர்வமாக எடுக்க வேண்டும். பல நேரங்களில் அவர் எடுக்கும் முடிவு சரியாக இருந்திருக்கலாம்,’’ என்று பேசியிருக்கிறார்.

விஜயலட்சுமி குறித்து கேட்கப்பட்டதற்கு, ‘’பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்க வேண்டியது ஒரு பெண்ணாக எனது கடமை தான். ஆனால், உண்மையில் என்ன நடந்தது, யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் விஜயலட்சுமி பேசுகிறார் என்ற கேள்வியும் இருந்தது. மேலும், விஜயலட்சுமி தனது குற்றச்சாட்டில் உறுதியாக நிற்கவில்லை. அதோடு சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை அது. அதில் விசாரணை எல்லாம் செய்ய முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

விஜய் கட்சியில் சேர்வதற்கு பணம் கேட்கிறீர்களா என்ற கேள்விக்கு, ‘’எல்லா கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வரத்தான் செய்கிறது. . அதை ஏற்பதா, எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் அறிவிப்பேன்.

ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்லும் போது, கட்சிப் பணியாற்ற பொருளாதார தேவை இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அதற்காக இப்படி மாதச் சம்பளம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்க முடியுமா? இப்படி நான் எந்த கட்சியிடமும் எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை உண்மையிலேயே தட்டிக் கேட்கும் எண்ணம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. கட்சியில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான பொறுப்பு கொடுத்தாலும், அந்த இடத்தில் பெண்ணிடம் கருத்து கேட்கப்படுவதில்லை. அரசியலில் இருக்கும் பெண்கள் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுங்கள்; அவர்கள் வரவே வராத அளவுக்கு பின் தள்ளிவிடாதீர்கள். உண்மையான அரசியல் பங்கேற்பை பெண்களுக்கு வழங்குங்கள்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link