Share via:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
செய்த அடாவடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது மட்டுமின்றி, அனைத்து
ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு
நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் குரல்
எழுப்பிவரும் நிலையில், கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்ப வைத்து மீண்டும்
ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள்
எவ்விதமான மதம் குறித்தும் பேசக்கூடாது. இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.என்.ரவி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன்,
மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கி.வீரமணி, ‘’இந்திய
அரசமைப்புச் சட்டப்படியான பொறுப்பில் உள்ள ஒருவர், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்
கூறான மதச்சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்; அதிகார வரம்பை
மீறிச் செயல்படுகிறார். மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயலும் கடைநிலை இந்துத்துவ
வெறியராகவே வலம் வருகிறார். உச்சநீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கிய பிறகும், தன்
போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையிலான தன் சொந்த விருப்பு
வெறுப்புகளை ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஒருபோதும்
ஏற்க முடியாது.
மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப்
பிரச்சாரம் செய்வதையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. கல்வித்
துறைக்கும் இவருக்கும் தொடர்பில்லை என்ற நிலை உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்ட
பிறகும், இவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவோர் யார் என மக்கள் அடையாளம் காணவேண்டும்.
இத்தகைய மதவெறியர் ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல்,
தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப்
போராடும் நிலையைத் தவிர்க்க முடியாது’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதையடுத்து ஜெய்ஸ்ரீராம் விவகாரத்துக்கு ஆளுநரை நீதிமன்றத்துக்கு
இழுக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்துவருகிறார்கள். நிலைமை சிக்கலாவதை
அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியையும், குடியரசுத் தலைவரையும் காப்பாற்றும் வகையில் மோடி
அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மீண்டும் சட்டப்போராட்டம் ஆரம்பமாகிறது.