Share via:
2023 உலகக்கோப்பை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த 5ம் தேதி (அக்டோபர்) 2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கியது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஒரு போட்டியை விளையாடி முடித்துவிட்ட நிலையில் ரசிகர்களின் முழு ஆர்வமும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில்தான் உள்ளது.
உலகக்கோப்பையில் தொடக்க விழா நடத்தப்படுவதில்லை என்ற குறையை போக்க இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது பல சுவாரசியமான நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளன.
அதிகாரப்பூர்வ விழாவாக இது இருக்காது என்ற போதிலும், அகமதாபாத்தில் வருகிற அக்டோபர் 14ம் தேதி நடக்க உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்கள் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா உலகக்கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை கொடுத்திருந்தார்.
1.32 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் மைதானத்தில் 7 ஆயிரம் குஜராத் போலீசாரும், 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அன்று நடைபெறும் போட்டியை இந்திய உள்துறை அமித்ஷாவும் பார்ப்பார் என்றும் தெரிகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்ல்கரும் இந்த போட்டியை பார்க்க உள்ள நேரத்தில், போட்டியின் போது பிரபல பாடகர் அரிஜித்சிங்கின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. போட்டியின் போது பட்டாசுகளை வெடித்து லேசர் ஷோவை நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகக்கோப்பை வரலாற்றில் 7 முறை இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள நிலையில் 8வது முறையும் இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

