Share via:
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் 2 அலுவலகங்களை நடத்தி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கூகுள் நிர்வாகம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் தங்களது ஊழியர்கள், அங்கு பயணம் மேற்கொண்டுள்ள கூகுள் ஊழியர்கள் என அனைவரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. மேலும் அவர்களுக்காக முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கூகுள் நிறுவனம் தயாராக உள்ளதாக இ மெயில் மூலம் சுந்தர் பிச்சை உறுதி அளித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல்- ஹமாஸ் பிரச்சினை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.