Share via:
’நம்முடைய மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பிவிட்டாயா உடன்பிறப்பே…’
என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தினம ஒரு கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருப்பார்.
அதே பாணியில், ‘மாநாட்டுக்கு வாங்க’ என்று விஜய் மூன்றாவது கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருக்கும் விஜய்யை இந்து மத விரோதி என்று சித்தரிக்கும்
வேலை நடக்கிறது.
2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் வி.சாலை
என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம் என்று மூன்றாவது கடிதத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
வெற்றி சாலை, விவேக சாலை, வியூக சாலை என்பதெல்லாம் கருணாநிதி பாணியில் இருக்கிறது,
இன்னும் கொஞ்சம் டிரெண்டிங்கா லெட்டர் எழுதுங்க தலைவா என்று அவரது ஆதரவாளர்கள் குரல்
கொடுக்கிறார்கள்.
அவரது மாநாட்டுக்கு பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின்
கட் அவுட் வைத்திருப்பதால் இப்போது தி.முக.வில் இருக்கும் பெரியாரியல் கருத்துரிமைப்
போராளிகள், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் காமராஜர் பக்தர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களில்
அதிருப்தியுடன் இருக்கும் பட்டியலின மக்கள் அனைவரும் விஜய் பக்கம் வந்துவிடுவார்கள்
என்று கணக்குப் போட்டு 40 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று விஜய்
ஆதரவாளர்கள் குஷியாகக் கணக்குப் போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாநாட்டில் பட்டாசு வெடிக்க விஜய் தடை போட்டிருக்கும்
செய்தியை வில்லங்கமாக்கி வருகிறார்கள். விஜய் வரும் நேரத்திலும் விழா நேரத்தில் வாண
வேடிக்கை நிகழ்த்தவும் செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு விஜய் தடை போட்டுவிட்டார். ரசிகர்கள்
யாரும் மாநாட்டில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடையும் போட்டிருக்கிறார்.
இந்த செய்திக்கு, ‘விஜய் தீவிரமான இந்து மத எதிர்ப்பாளர். கிறிஸ்தவ
மதத்தைத் தூக்கிப் பிடிக்கவே வந்திருக்கிறார். அதனாலே இந்துக்கள் வெடித்துக் கொண்டாடும்
பட்டாசுக்கு தடை போடுகிறார்’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மாநாடு வெற்றி அடையக் கூடாது என்பதற்காக தி.மு.க. ஐ.டி. விங் ஆட்களே
இப்படி செய்தி பரப்புவதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.
ஆனாலும், நிஜமாகவே தலைவர் இந்துக்களுக்கு எதிரியா என்ற சந்தேகத்துக்கு விடை புரியாமல்
விழிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.