Share via:
பிரதமர் பாதுகாப்பாக வரமுடியாத அளவுக்கு இந்திய நாடாளுமன்றம் இருக்கிறது
என்று பாஜகவினரே பதறுவதைப் பார்க்கையில், நாட்டு மக்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி
எழுகிறது. அதேநேரம், நம்மூர் ஜோதிமணியைப் பார்த்து பிரதமர் அஞ்சுகிறார் என்றால், அவருக்கும்
பாஜகவுக்கும் இம்புட்டுத்தான் வலிமையா என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’போட்டியிடும்
இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி,
பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் எனும் சமூகவிரோத அமைப்பை
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எதிராக இப்படியொரு சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை
போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் பகிரங்கமாக
மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை
செய்திருக்கிறார்.
இதற்கு ஜோதிமணி, ’’சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் குற்றச்சாட்டு
அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேசவேண்டும். பிறகு
பிரதமர் பதிலளிப்பார். இதுதான் வழக்கம்.நடைமுறை.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பேச்சிற்குப்
பயந்துகொண்டு அவரைப் பேசவிடாமல் பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் தடுத்தனர்.
நான்கு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் மக்களவையில் பேச முடியவில்லை.
நேற்று ஒரு பாஜக எம்.பி.யை முன்னாள் பிரதமர்களைப் பற்றி ஆபாசமாகவும்,அறுவெறுப்பாகவும்
பேச அனுமதிக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கேட்டோம். நடந்த மாபெரும் தவறை சபாநாயகர் மறுக்கவில்லை. போய்விட்டு
நான்கு மணிக்கு வாருங்கள் என்று சொன்னார். நாங்கள் மீண்டும் நான்கு மணிக்கு சென்றபோது”
நான் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை”
என்று சொல்கிறார்.
அப்படியென்றால் சபையை நடத்துவது யார்? எதிர்கட்சியில் ஒருவர் கூட
பேசாமல் ,பேச அனுமதிக்கப்படாமல் பிரதமர் எப்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தில் பேசமுடியும்? ஆளுங்கட்சியினரே பேசிக்கொள்வதற்கு இது ஒன்றும் பாஜகவின்
கட்சி அலுவலகம் அல்ல. நாடளுமன்றம்.
சீனா தாக்குதல்,இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்,எப்ஸ்டீன்
பைல் இவை குறித்த பயம் தான் பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்தது. நாங்கள் அதுதொடர்பான
பதாகைகளை கையில் ஏந்தியிருந்தோம். உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். பிரதமர்
எங்களை எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளப் பயந்துகொண்டு தான் அவைக்கு வரவில்லை. இதை மறைக்க
இப்பொழுது சபாநாயகரின் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக்கேடானது…’’
என்று கொதிக்கிறார்.
