Share via:
கவர்னருடன் டீ பார்ட்டியில் கலந்துகொண்டு திடீரென தி.மு.க. இணக்கம்
காட்டியது. இதையடுத்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர்
பொன்முடி பூச்செண்டு கொடுத்து வரவேற்கவும் செய்தார். இந்த நிலையில் செக்யூரிலரிசம்
பேசிய கவர்னருக்கு தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை எனப்படும் செக்யூலரிசம் என்பதே ஐரோப்பிய
சிந்தனை. இந்தியாவுக்கு ஏற்றது இல்லை என்று கவர்னர் வழக்கம் போல் வம்பிழுக்கும் பேச்சை
ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதற்கு தி.மு.க.வினர், ‘’கவர்னர் பதவி ஐரோப்பியக் கருத்து
தான். கவர்னர் மாளிகை ஐரோப்பியன் கட்டியது தான். பேண்ட், சர்ட், கோட் ஐரோப்பியர் களுடையது
தான். பேசும் மைக் ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். பேசிய மொழியும் ஐரோப்பிய மொழி தான்.
ஐ.பி.எஸ். படிப்பும் ஐரோப்பியா கருத்து தான். ஏன் தனியே உளறி கொண்டிருக்கிறீர் மிஸ்டர்
நாகரீக கோமாளி?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு, ‘’ஐரோப்பிய, அமெரிக்க இறக்குமதி என்பதற்காகவே ஒன்றை ஒதுக்கவோ,
தவிர்க்கவோ செய்யலாமா? அப்படி செய்தால் எதையெல்லாம் ஒதுக்க வேண்டி வரும்? நாம் பின்பற்றும்
உடை நாகரீகம் முக்கால்வாசி அந்நிய ஸ்டைல்தான். மின்சாரம், கேமரா, மொபைல் ஃபோன், லேப்டாப்,
பைக், கார், பஸ், ரயில், விமானம், டிவி, ரேடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர் மாதிரி சாதனங்கள்
வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு இங்கு வந்தவை. நம் சினிமா, திரை இசை வடிவம் போன்றவை
வெளிநாட்டு இறக்குமதிகள். கர்நாடக சங்கீதத்தில் கூட பயன்படுத்தப்படும் வயலின் இத்தாலியில்
கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணர் பயன்படுத்திய புல்லாங்குழலே கூட ஒரிஜினல் இல்லை. உலகின்
ஆகப்பழைய புல்லாங்குழல் ஜெர்மனி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
சமையல் அறையில் பயன்படுத்தும் கேஸ் ஸ்டவ், மிக்சி, மைக்ரோவேவ், பிரிட்ஜ் மாதிரி சாதனங்கள்
வெளி நாட்டு இறக்குமதிகள்தான். நாம் சாப்பிடும் பிரியாணி, சமோசா, காபி, டீ போன்றவை
அந்நிய ஐட்டங்கள். வேர்க்கடலை, மிளகாய் போன்றவை தென் அமெரிக்க உபயம்; உருளைக் கிழங்கு
போர்த்துகீசிய இறக்குமதி. தமிழ் உணவு என்று கொண்டாடும் இட்லியே ஒரிஜினலாக குஜராத்தா,
இந்தோனேசியாவா என்று ஒரு சர்ச்சை தனியாக ஓடிக் கொண்டு இருக்கிறது. நாம் பயன்படுத்தும்
கம்ப்யூட்டர் மென்பொருள்களில் தொண்ணூறு சதவீதம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வடிவமைக்கப்
பட்டவை. நாம் படிக்கும் புத்தகம் ஜெர்மனியில் முதலில் உருவாக்கப்பட்டது.
நாம் பின்பற்றும் பள்ளிக் கல்வி முறை அந்நிய இறக்குமதிதான். மேற்கத்திய
விஷயங்களை வைத்து அங்கலாய்க்கும் எவரும் தங்கள் பிள்ளைகளை வேத பாட சாலைகளில் சேர்ப்பதில்லை.
நாம் இன்று பின்பற்றும் விவசாய முறையே கூட வெளிநாட்டுக் கொடைதான். இந்தியப் பாரம்பரிய
விவசாய முறையில் தொடர்ந்து பயிரிட்டு வந்திருந்தால் இந்நேரம் தெற்காசியாவில் சுமார்
ஐம்பது கோடி பேர் பட்டினியில் செத்துப் போயிருந்திருப்போம். நாம் இன்று பரவலாக பின்பற்றும்
மருத்துவம் ஆங்கில மருத்துவம் எனப்படும் மேற்கத்திய மருத்துவ முறைதான். மேற்கத்திய
இறக்குமதிகளை ஒதுக்குவோம் என்று ஆரம்பித்தால் நாம் ஏறக்குறைய கற்கால லெவலுக்குத்தான்
திரும்ப வேண்டி இருக்கும்’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையிலான பஞ்சாயத்தை
திசை திருப்பவே கவர்னர் விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார்களோ..?