Share via:

உலகை உலுக்கிய வகையில் இந்தியாவில் விமான விபத்து நடந்துள்ளது.
இந்த விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிடச் சென்ற மோடி காஸ்ட்யூம் மாற்றியதும் அமித்ஷா
இந்த விபத்தை விதி என்று விட்டு விட வேண்டும் என்று கூறியதும் வைரலாகிவருகிறது.
விமான விபத்துக்கு கடவுளே காரணம், விதி என்று விட்டுவிட வேண்டும்
என்றெல்லாம் அமித்ஷா பேசியிருக்கிறார். நாட்டுக்கு என விமான நிறுவனம் இல்லை. தனியார்
நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சக்தியும் அமைச்சரவைக்கு இல்லை. பிறகு எதற்கு இந்த டிராமா
என்று காரணம் கேட்கிறார்கள்.
இது குறித்துப் பேசுபவர்கள், ‘’ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம்
இடிந்து நொறுங்கியது, என்ற செய்தி மனிதத்தை இடித்து நொறுக்கி விட்டது. ஏர் இந்தியா
நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் டாட்டாவிடம் விலை பேசி விட்டது இன்றைய ஆட்சி.
தற்போது ஒன்றிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் எந்த ஒரு விமான சேவையும் இல்லை விபத்துகள்
நிகழவில்லை என்றாலும் போயிங் 787 விமானம் பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டுகள்,
2011-ஆம் ஆண்டிலிருந்து வரத் துவங்கி விட்டன; பயணிகள் சேவை; விமான கட்டமைப்பு கோளாறு;
தரமற்ற உதிரி பாகங்கள்; இணைப்புக் கோளாறு என்று தொழில்நுட்ப ரீதியாகவும் சேவை ரீதியாகவும்
குற்றச்சாட்டுகள் வரத் துவங்கின,
இவற்றை எல்லாம் ஏர் இந்தியா நிறுவனம் இவைகளை தொடர்ந்து மறுத்து
வந்தது. இந்த விமான உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் இதன் ஆபத்து
குறித்து பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தனர். ஒருவர் லண்டன் நீதிமன்றத்திலேயே
வழக்குத் தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்தில் மரணம் அடைந்து விட்டார். பாதுகாப்பு குறைபாடுகளை
சுட்டிக்காட்டி போயிங் நிறுவன ஊழியர்களே 2019 இல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஏர்
இந்தியா நிறுவனம் குற்றச்சாட்டுகளை மறுத்தது ஒன்றிய ஆட்சியும் கண்டுகொள்ளவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல்
இந்த விபத்துக்கு காரணம் கடவுளும் விதியும் தான் என்று அமித்ஷா கூறி இருக்கிறார். காங்கிரஸ்
கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. காயமடைந்தவர்களும் பயணத்தைத் தவறவிட்ட
ஒரு பெண்ணும் தங்களை கடவுள் காப்பாற்றினார் என்று கூறுவது கடவுளையே அவமதிப்பதாகும்.
அப்படியானால் இந்த 246 பேரையும் மரணிக்க வைத்தது கடவுளா? கடவுள் என்று ஒருவர் இருந்தால்
அவருக்கு மனித நேயமே கிடையாதா? என்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும்.
குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான ரூபாணி மரணம் அடைந்தவர்களில்
ஒருவர். தனது ராசி எண் 1206 என்று அவர் நம்பியவர் தனது அனைத்து வாகனங்களிலும்அதையே
பதிவு செய்தார், ஆனால் அதே 6-ம் மாதம்12-ம் தேதி அவர் மரணத்தைத் தழுவி விட்டார்! ராசி
எண் அவரைக் காப்பாற்ற வரவில்லை. கடைசி நேர உரையாடல்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்
பதிவு செய்யும் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியை ஆராயும்
போது விபத்துக்கான காரணம் தெரியும். கடவுளும் விதியும் தான் என்று அமித்ஷா கூறுவதை
அந்த கருப்புப் பெட்டி நிச்சயம்கூறாது. அது இந்துத்துவ தயாரிப்பு அல்ல!அதற்கு கடவுளோ
மதமோ ஜாதியோ தலை விதியோ தெரியாது அறிவியலைத் தான் பதிவு செய்யும்…’’ என்று விமர்சனம்
செய்கிறார்கள்.
விமானத்தை மேலே இருந்து மோடி பார்க்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது.
இப்படியொரு போட்டோ எடுக்க வேண்டும் என்றால் போட்டோகிராபர் எந்த நிலையில் எடுத்திருக்க
வேண்டும் என்று அந்த போஸ் போட்டு கிண்டலடிக்கிறார்கள். இந்த விபத்திலும் அரசு எந்த
பாடமும் கற்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.