Share via:
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில், ‘மாவட்டந்தோறும் ஒரு தோழி விடுதி’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் 2வது நாள் அவை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் தனித்தனியே பதில் அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மரகதம் குமரவேல் பேசும்போது, ‘‘மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு ‘தோழி விடுதி’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, ‘‘மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது என்று கீதா ஜீவன் தெரிவித்தார். மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட இடங்களில் தோழி விடுதிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் உறுப்பினர்கள் மத்தியில் புள்ளிவிவரத்துடன் விளக்கம் அளித்து பேசினார்.