Share via:
பீகார் மாநிலத்தில் விரதம் இருந்து ஆற்றில் நீராட சென்ற 24 பெண்கள் நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜிவித்புத்ரிகா என்ற பண்டிகை 3 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. விரதம் இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நோன்பு இருப்பது வழக்கம்.
அந்த வகையில் விரதம் இருந்த பெண்கள் நேற்று நீர் நிலைகளில் நீராடிய போது 24 பெண்கள் உயிரிழந்ததாக பீகார் மாநில அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இச்செய்தியை உறுதி செய்த அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், போஜ்பூரில் 5 பெண்கள், ஜெகன்பாத்தில் 4 பெண்கள், பாட்னா, ரோகத்ஸ் பகுதிகளில் தலா 3 பெண்கள், தர்பங்கா மர்ரும் நவடா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பெண்கள், கைமுமர், மதேபுரா மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் தலா ஒரு பெண் என மொத்தம் 24 பெண்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மேலும் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த நிதிஷ்குமார், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியையும் அறிவித்துள்ளார். குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்த பெண்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
