Share via:
ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை நேரங்களில் பப்ஸ், சமோசா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் ஈரோடு அருகே நசியனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் அவரது 4 வயது மகள் தர்ஷினி ஆகிய3 பேரும் வில்லரசம்பட்டி பிரிவில் உள்ள பேக்கரியில் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த 3 பேருக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், 3 பேரையும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவர்கள் மூவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட பேக்கரியில் மாநகராட்சி உணவு பாதுகாப்புத துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு விற்பனைக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த முட்டை பப்ஸ் உள்ளிட்ட பொருட்களையும், உணவு தயாரிப்பு பொருட்களையும் சோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து உணவுப் பொருட்கள் குறித்த முடிவு தெரியும் வரை உணவுப் பொருட்கள் தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் உத்தரவிட்டு சென்றனர்.
தரமான உணவை சாப்பிடலாம் என்று நம்பி தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றலாமா என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.