Share via:
எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை கிடைக்க விட மாட்டேன் என்று
பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மீண்டும் மீண்டும் புகார் கொடுத்துக்கொண்டிருக்க,
ராமநாதபுரத்தில் பன்னீருக்கு எதிராக நிறைய பன்னீர்களை நிறுத்தி கெத்து காட்டுகிறார்
எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடியின் டீம் ஓ.பன்னீர்செல்வம் என்று பெயர் உள்ள நபர்களை
தேடிப் பிடித்து கையில் 1 லட்சம் பணம் கொடுத்து வேட்பாளர்களாக நிறுத்தி வைக்கிறார்கள்.
அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்
செய்த அதே தினத்தில் மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம்
என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு
காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம்
தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும், மதுரை
சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும் மனுதாக்கல்
செய்தனர்.
நேற்று வரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வம்
பெயருடைய 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயர், இன்ஷியலில்
வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள 5 பேருமே சுயேச்சைகள். இவர்களுக்கு சுயேச்சை சின்னங்களே
ஒதுக்கப்படும்.
வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது புதிய சின்னம் என்பதால்
எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னம் என்பது நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும்.
5 பேரின் பெயர்கள் வரிசையாக இடம்பெற்றிருக்கும். சின்னம் மட்டுமே வேறுவேறாக இருக்கும்.
பெயரைப் பார்த்தால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும். சின்னத்தை மட்டுமே அடையாளமாகக்
கொண்டு வாக்களிக்க முடியும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாளி, பலா, திராட்சை ஆகிய
சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தனக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளார். தற்போது வேட்பு மனுத்
தாக்கல் செய்துள்ள மற்ற 4 பேரும் தங்களுக்கும் அதே சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு
கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஐந்து பேர் மட்டுமின்றி வாக்காளர் பட்டியலை தேடிப்பிடித்து
இன்னமும் சில பன்னீர்செல்வம் போட்டிக்கு வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.