Share via:
அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னத்தை இனி பயன்படுத்தமாட்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம் அளித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தார். இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மனு இன்று (நவ.30) நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் கூறும்போது, மேல்முறையீட்டு மனு மீதானதீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தீர்ப்பு வரும்வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்று கூறினார். இதை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாமே என்று கூறினார். இதைத்தொடர்ந்து இவ்வழக்கை வருகிற டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்த நி லையில், அதுவரை இந்த தடையை மீறக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் இந்த தடையை மீறும்பட்சத்தில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதை கொண்டு வரும்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.