Share via:
கடந்த முறை திமுக ஆட்சி அமைத்ததும் ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் பதவி
கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. குடும்ப பஞ்சாயத்து மற்றும் வயது மூப்பு காரணமாக
அவரை ஒதுக்கிவைக்க ஸ்டாலின் நினைத்தார். ஆனால், தன்னை நிராகரிக்கவே முடியாது என்று
சண்டை போட்டு காரியத்தை சாதித்துக்கொண்டார் ஐ.பெரியசாமி. மீண்டும் அவர் நிராகரிக்க
முடியாத சக்தியாகவே இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
திமுக சார்பில் கிட்டத்தட்ட 15,372 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்தார்கள்.
கடந்த 17 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 7 தொகுதிகளில் திமுக சார்பில் யாருமே
விருப்ப மனு அளிக்கவில்லை என்பதுதான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர், துணை
முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஐ. பெரியசாமியின் ஆத்தூர்,
கே.என். நேருவின் திருச்சி மேற்கு, தங்கம் தென்னரசுவின் திருச்சுழி, சக்கரபாணியின்
ஒட்டன்சத்திரம் மற்றும் மூர்த்தியின் மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில்
யாரும் போட்டியிட மனு அளிக்கவில்லை
இங்கு பெறப்பட்ட விருப்பமனுக்கள் எல்லாமே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்
பெயரிலே விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் இந்த 7 பேரும் மீண்டும்
போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைமை எத்தனை ஒதுக்கினாலும் தனி மனிதனாக தன்னுடைய செல்வாக்கை மீண்டும்
நிரூபித்திருக்கிறார் ஐ.பெரியசாமி. இந்த முறையும் தமிழ்நாட்டில் அதிக வாக்குகளில் வெற்றி
பெற போகும் ஆளுமை என்கிறார்கள். ஐ.பெரியசாமிக்கு போட்டியே இல்லை என்பது ஸ்டாலினுக்கு
ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறதாம்.
