Share via:
வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பல
கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டிவந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே
குற்றவாளிகள் என்று சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. செல்போனில்
அழிக்கப்பட்ட காட்சிகள் மீட்டெடுக்கப்பட்டதாக ஆடியோ, வீடியோ, புகைப்பட்டங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலும், சிபிஐ விசாரணை கேட்டு திருமாவளவன் ஆவேசம் காட்டியிருக்கிறார்.
அதேநேரம், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆடியோ, வீடியோ வெளியானது
எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கு, அண்ணா நகர் சிறுமி வழக்கு,
அண்ணா பல்கலைக்கழக வழக்கு ஆகிய வழக்குகளை தொடர்ந்து வேங்கைவயல் வழக்கிலும் காவல்துறை
கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதாரங்கள் திட்டமிட்டே வெளியே கசிந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வதை விட பொதுவெளியில் மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்காக
இப்படி ஆதாரங்கள் வெளியிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பே குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு
எதிராக வந்தாலும் திமுக எதிர்ப்பாளர்கள், விசிக, கம்யூனிஸ்ட்கள், எவிடன்ஸ், நீலம் உள்ளிட்டோர்
அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது தான் உண்மை. இதை நிரூபிப்பது போன்று சிபிஐ விசாரணை
கேட்டிருக்கிறார் திருமாவளவன். அவரது அறிக்கையில், ‘’வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில்
தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர்
குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
ஆவார்கள்.
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான்
வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை
கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும்
குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட
வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட
குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில்
காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான்
இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த
இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம்
ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை
கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ
என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு
இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும்
விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்
கூடாது’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.
பட்டியல் இனத்தவர்கள் என்றால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்களா
என்று திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.