Share via:
நடிகைகள் சினிமாவில் நீடித்திருக்க வேண்டும் என்றால் சிலவற்றை மறைத்தும் மறந்தும்தான் இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் செய்திதான் பேச்சுப் பொருளாக மாறியிருந்தது. ஒரு வழியாக மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்ட மன்னிப்பை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் மன்சூர் அலிகான் மீது சட்ட சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது.
இந்த விவகாரம் அடங்குவதற்குள் பிக்பாஸ்7ல் பேசிய நடிகை விசித்ரா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி சோசியல் மீடியாக்களுக்கு செய்திகளை வாரி வழங்கி வருகிறது. விசித்ரா தன்னுடைய பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் பெயரை வெளியிடாமல் இருக்கிறார் என்று விசித்ராவின் கணவரும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை குட்டிபத்மினி தன் பங்கிற்கு சில கருத்துகளை போகிற போக்கில் அள்ளிவீசி பிரச்சினையை பெரிதுபடுத்தியுள்ளார். அவர் பேசும்போது, த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது முற்றிலும் தவறுதான். அவரது மனதில் இருந்த வக்கிரம் வெளிப்பட்டதுதான் இந்த பிரச்சினை உருவாகக் காரணம். ஆனால் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்சில் தமன்னா உடன் பேசவே முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது ஆபாச பேச்சாக வராது. அதோடு நடிகர் விஜய், சிம்ரனையும், ஜோதிகாவையும் குதிரை என்றும் கூறிய நிலையில், இருவரும் கண்ணியத்துடன் தான் பேசியுள்ளனர் என்று நன்மதிப்பு சான்று அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகை விசித்ரா விவகாரம் குறித்து கேட்ட போது, ‘‘நடிகைகள் சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும் என்றால், சிலவற்றை மறைத்தும் சிலவற்றை மறந்தும் தான் இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார். குட்டிபத்மினியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகைகள் குறித்து ஒரு நடிகையே இப்படி பேசலாமா? ஒரு வேளை இப்படித்தான் குட்டி பத்மினியும் சினிமா உலகில் நீடித்தாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள் நெட்டீசன்கள்.